ஞாயிறு, 20 ஜூலை, 2008

உறவுகள்

கண்ணாடி பிம்பங்களாய்
நம் உறவுகள்
சிரித்தால் சிரித்து,
அழுதால் அழுது,
கவனக்குறைவாய் இருந்தால்
மட்டும்
சுக்கு நூறாய்!!!!

ஞாயிறு, 13 ஜூலை, 2008

நினைவுகளின் அணைப்பில்

தினமும் காலை எழுந்ததும்
அலைபேசியில் ஆவலுடன்
அன்றைய குறுஞ்செய்திகளை பார்ப்பேன்,
இன்றாவது உன்னிடம் இருந்து
ஏதேனும் செய்தி உண்டா என்று!


சில பாடல்களை கேட்கையில்
சில்லென்று உன் நினைவுகள்
என்னை அரவணைத்து செல்லும்!

சில பெண்களை பார்க்கையில்
இந்த உடையை நீ அணிந்திருந்தால்
இன்னும் அழகாக இருக்கும்
என நினைத்ததுண்டு!

நான் காணும் பல பெண்களில்
உன்னை பார்த்ததுண்டு!
சிலரின் சிரிப்பில்,
சிலரின் கோபத்தில்,
சிலரின் புன்னகையில்!
நினைவுகளின் பாசறையில்
உந்தன் நிழல்கள்!

பல நேரங்களில்
உன் நினைவுகளுக்கும்
நேரத்திற்கும் நடுவே
என்னை தொலைத்ததுண்டு!

ஒவ்வொரு நாளிலும்
உந்தன் நினைவுகள்
என்னை சுற்றி ஒரு
மணிக்கு ஒரு முறையாவது
உன் நினைவுகள் என்னை சீண்டும்!
சில நேரங்களில்
சிரித்து கொள்வேன் ,
சில நேரங்களில்
சிறு புன்னகை புரிவேன்,
சில நேரங்களில் மட்டும்
ஒரு சொட்டு கண்ணீர்
என் இமையோரம்
எட்டி பார்த்து என்னை கேலி செய்யும்!

ஒரு நாளில் ஒரு முறையாவது
நீ என்னை நினைத்ததுண்டா?

சனி, 15 மார்ச், 2008

நிலாமகள்

உன் சிறு புன்னகையில்
சிந்தனை மதில்களை
சிதறடித்தாய் !!!
தலை கலைத்து
சிரித்து என்
கவலைகள் யாவும் கலைத்தாய்!!!
சிறுவிரல்கள் ஸ்பரிசத்தில்
கண் அயர்ந்து நீ
உறங்கையில்,
ஆயிரம் கனவுகள்
எனக்கு அளித்தாய்!
மழலை பேச்சில்
மனம் குளிர வைத்தாய்,
நினைவுகளாய் கட்டி அனைத்து
சிறை பிடித்தாய்!
இன்றும் புரியாத
கனவுகளாய் உந்தன்
நினைவுகள்!

புதன், 27 பிப்ரவரி, 2008

காதலுடன் என்றும் நான்

தோளில் நீ சாய்கையில்
சில்லென்று ஒரு தென்றலும்
என்னை சுற்றி சுழன்றது,
என் கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும் எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,
ஒவ்வொரு புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,
ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா நீ?
உன் நினைவுகள்
என்னுள் கலந்திட,
வெறுமை அனலாய் எரித்திட
காதலுடன் என்றும்
நான்!

புதன், 20 பிப்ரவரி, 2008

இதயத்தின் ஒரு பகுதி

நனைந்த மாலை மழை பொழுதில்,

வீதியோரம் பூத்திருக்கும் மலர்களில்,

வானம் கொள்ளா வானவில் காணும்

குழந்தையின் மழலை சிரிப்பில்,

நெடுந்தூர பயணத்தின்

ஜன்னலோர இருக்கையில்,

மடியில் உறங்கும்

மகளின் அணைப்பில்,

என்றோ தொலைத்த இதயத்தின்,

அழியாத ஒரு பகுதி,......


நினைவில் சில கனவுகள்

எட்டும் தொலைவில் வானம்,
விண்மீனும் கண் சிமிட்டும்,
வானவில் வந்து குடை பிடிக்கும்,
நீ என் அருகில் இருந்தால்!!!!
உன் முகத்தில் விழும் கேசம்,
அழகின் கதைகள் பேசும்,
தோளில் சாய்ந்த உன் வாசம்,
என் சட்டையிலும் கொஞ்சம் மிஞ்சும்
நான்கு விழிகளில் ஒரு கனவு ,
என்று ஆகும் நனவு ,
என்றும் எதிலும் எங்கும்
உன் நினைவு!!!!